கிளிநொச்சிக்கு என நிரந்தரமான தீயணைப்புப் படை விரைவில் நிறுவப்படவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.அதற்கான வேலைத்திட்டங்களில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்துக்கு என நிரந்தரமான தீயணைப்புப் படையோ, அதற்கான வாகன வசதிகளோ இல்லாது அங்குள்ள மக்கள்இ அதிகாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.இடர்கள் இடம்பெறும்போது அவற்றின் முக்கியத்துவம் உணரப்படும். பின்னர் அதுபற்றிய பேச்சுகள் நிறுத்தப்படும்.
எனினும் கடந்த 2016ஆம் ஆண்டு செப்ரெம்பர் 16ஆம் திகதி இரவு கிளிநொச்சியையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று பதிவு செய்யப்பட்டது.கிளிநொச்சி பொதுச்சந்தையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தேவையான வசதிகள் இல்லாததன் காரணமாக 2 மணித்தியாலங்களில் வேகமாக பரவிய தீ பொதுச்சந்தையில் உள்ள சுமார் 125 கடைகளை எரித்து நாசமாக்கியது.
கடைகள் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது சம்பவ இடத்துக்கு வந்த வர்த்தகர்கள் தங்களுடைய பொருள்களை மீட்பதற்காகவும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் போராடினர்.தனியே மனிதர்களுடைய சக்தியால் இயற்கையை கட்டுப்படுத்த முடியாது என்பது போல, அவர்கள் எவ்வளவு முயற்சித்தும் எந்தப் பயனும் அற்று அனைத்துப் பொருள்களும் தீயில் கருகின.
கண்ணெதிரே தங்களுடைய சொத்துக்கள், அழிவதைத் தாங்கிக் கொள்ள முடியாத வர்த்தகர்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர்.இந்தச் சோகச் சம்பவம் அங்கிருந்த அனைவரது உள்ளத்திலும் பேரிடியாக விழுந்தது.அதிகாரிகளின் கண்களும் கசிந்தன. இந்தச் சம்பவத்தின் பின்னர் கிளிநொச்சிக்கென ஒரு தீயணைப்புப் படை வேண்டும் என்பது அழுத்திக் கூறப்பட்டது.
மக்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் பலரும் அதில் அக்கறை கொண்டனர்.அடுத்ததொரு இடர் இடம்பெறமுன்னர் கிளிநொச்சியில் தீயணைப்புப் படை தயார் நிலையில் இருக்கும் என நம்பினர்.தற்போது அதற்கான வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன.தீயணைப்புப் படைக்கான கட்டடம் கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைக்கப்படுகிறது. அது முடிவுறும் தறுவாயில் உள்ளது.
அதே போல் தீயணைப்புப் படைக்குத் தேவையான பவுசர்கள், தீயணைப்பு இயந்திரங்கள் என்பவற்றை வெளிநாட்டில் இருந்து பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.எனவே, அனைத்தும் நிறைவுற்று விரைவில் கிளிநொச்சி தீயணைப்புப் படையும் தனது சேவைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.