ஆனந்த சுதாகரனின் விடுதலை குறித்து ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பு!

19821 0

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலையை கோரும் விடயத்தில் ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகள் இன்று ஜனாதிபதி செயலாளரை சந்தித்துள்ளனர்.ஜனாதிபதியின் செயலாளரை அவரது செயலகத்தில் வைத்து சந்தித்து ஆனந்த சுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.இதன்போது, ஜனாதிபதிக்கு ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளும் நேரடியாக மகஜரினை ஒப்படைத்துள்ளனர்.ஜனாதிபதியின் செயலாளர் மகஜரை பெற்றுக்கொண்டுள்ளதுடன், ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதற்குரிய ஏற்பாடுகளை ஜனாதிபதி முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இவர்கள் கடந்த சனிக்கிழமை கொழும்பில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து, தாயை இழந்து தவிக்கும் தமக்கு தந்தையுடனேனும் இணைந்து வாழ நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

குழந்தைகளின் கோரிக்கையை ஏற்ற ஆளுநர், இது குறித்து ஜனாதிபதியிடம் கலந்துரையாடுவதாகவும், ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார்.

அதற்கமைய ஜனாதிபதியுடனான சந்திப்பு இன்று இடம்பெற்றிருந்ததுடன், நம்பிக்கையான வாக்குறுதியும் ஜனாதிபதியிடமிருந்து கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment