திருகோணமலை வான் எல ஆயுள் வேத மத்திய மருந்தகம் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் இன்று (29) உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டது.
53 இலட்சம் ரூபாய் பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டிடத்தினை மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும், கிராமப்புறங்களை அபிவிருத்தி செய்வதுடன் வீதி, குடிநீர் மற்றும் போக்குவரத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாகவும் ஆளுநர் ரோஹீத போகொல்லாகம இதன் போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஷார், திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் ஆர்.சிறிதர் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வான் எல பிரதேசத்திலுள்ள மக்கள் தங்களுக்கு ஆயுர் வேத வைத்தியத்திற்காக திருகோணமலை அல்லது கந்தலாய் பகுதிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளதாகவும் அக்கிராம மக்கள் கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் மாகாண சுதேச மருத்துவ ஆணையாளருக்குக் கூடிய விரைவில் மத்திய மருந்தகத்தினை அமைக்குமாறு ஆலோசனை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

