மீன் உற்பத்தி அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு மன்னார் மற்றும் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்திற்கு நியூசிலாந்து உதவிகள் வழங்க முன்வந்துள்ளது.
இலங்கையில் கடற்றொழில் துறை திட்டங்களில் தமது நாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள் என இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஜோனா ஹம்பக்கர் (Joanna Kempker) தெரிவித்துள்ளார்.
நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த உறுதிமொழியை தெரிவித்துள்ளார்.
நீரியல்வள அமைச்சில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இலங்கைக்கம் நியூசிலாந்திற்கும் இடையிலான பல விடயங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கடற்றொழில் நிலைபேறான முகாமைத்துவத்தில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது. இத்துறையில் தனது அனுபவங்களை இலங்கையுடன் பரிமாறிக்கொள்வதுடன் காத்திரமான கடற்றொழில் அபிவிருத்திக்கு உதவுவதாகவும் நியூசிலாந்து தூதுவர் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் முகாமைத்துவத்தில் இலங்கை அதிகாரிகளுக்கும் அத்துறையை சார்ந்தோர்களுக்கும் பயிற்சிகளும் இதன்கீழ் வழங்கப்படவுள்ளது.

