பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இனவாத கருத்துக்களை பரப்பும் இளைஞர்கள் உள்ளிட்ட நபர்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு பிரிவின் விசேட பிரிவொன்றினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சமூக வலைத்தளங்களூடாக இவ்வாறான இனவாத கருத்துக்களை பரப்புபவர்கள் யாராக இருப்பினும் உடனடியாக கைது செய்து கடும் சட்டநடவடிக்கை எடுக்குமாறு பொலிஸின் அனைத்து பிரிவுகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகமான வேளைகளில் தமது பெற்றோரின் அல்லது பெரியவர்களின் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிக்கும் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை சமூக வலைத்தளங்களூடாக இனவாத கருத்துக்களை பரப்பிய பாடசாலை மாணவர்கள் 6 பேர் தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

