ஆணாதிக்கச் சிந்தனையில் வளர்ச்சியடைந்துள்ள எமது சமூகத்தில், பெண்களின் வாழ்வியல் நிலையானது பெரும் போராட்டம் நிறைந்ததாகவே உள்ளது. கல்வியில் வியக்கத்தக்க அளவுக்குப் பெண்கள் சாதனை படைத்துள்ள போதிலும், குடும்பத்திலும் சரி, பணியிடங்களிலும் சரி மற்றும் அரசியலிலும் சரி தமது கொள்கைகளையும் செயற்பாடுகளையும் பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே அவர்கள் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
சமூகம் சார்ந்த கட்டமைப்பை, ஒழுக்கமான நல்லதொரு சமூகத்தைத் தோற்றுவிக்க வேண்டிய பொறுப்பு பெண்களின் கரங்களிலேயே தங்கியுள்ளது. சிறந்த ஆளுமைப் பண்புகளோடு குடும்பங்களிலும், பணியிடங்களிலும், சமூகத்திலும் தலைமைத்துவத்தோடு பெண்கள் வாழ்கின்றனர்.
அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகமிகச் குறைவானதே. உலகின் முதலாவது பெண் பிரதமராக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா என்ற இலங்கைப் பெண்மணி இருந்துள்ளார் என்பது பெண்ணினத்துக்கே பெருமையானது. இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் பெண்கள் 52 வீதத்தி னராக உள்ளபோதிலும், அரசியலில் அவர்களது பிரசன்னம் மிகவும் குறைவாகவே உள்ளது.
பிரதேச சபைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டப்படும் போதிலும், அங்கும் பெரிதான நாட்டமின்மையே காணப்படுகின்றது. தேசிய ரீதியாக நோக்குமிடத்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக 225பேர் உள்ளபோதிலும் அவர்களில் பெண் உறுப்பினர்களாகப் 11 பேரே உள்ளனர். உள்ளூராட்சி சபைகளில், 3 ஆயிரத்து 928 பேர் உறுப்பினர்களாக உள்ள நிலையில் பெண் உறுப்பினர்கள் 76 பேரே உள்ளனர்.
இலங்கை அரசியலில் பெண்களது பிரதிநிதித்துவம் மிக மிகக் குறைவு
இலங்கையின் உள்ளூராட்சி சபைகளில் பெண்களது அங்கத்துவமானது மாநகரசபைகளில் 3 வீதமாகவும், நகரசபைகளில் 2வீதமாகவும், பிரதேச சபைகளில் ஒரு வீதமாகவும் உள்ளதைக் காணமுடிகிறது.
இவர்கள் அனைவரும் முழுவிருப்புடன் அரசியலுக்குள் புகுந்தவர்கள் அல்லர். அனுதாப வாக்குகளாலும், அரசியலில் உறுப்பினராக இருந்த கணவன் இறந்தபின் (கொலைசெய்யப்பட்ட பின்) அதே பதவிக்கதிரைகளில் அமர்ந்தவர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுமாக சில பெண்கள் அரசியலை அலங்கரிக்கின்றனர்.
உண்மையில் அரசியலில் பெண்கள் நுழைவதற்கு முதற்காரண மாய் அமைவது பயமே. காரணம் எமது அரசியல்வாதிகள் சிலர் படுகொலை செய்யப்பட்டதும், பெண்களை எமது சமூகம் இரண்டாம் பட்சமாக இன்றும் நோக்குவதுமாகும். அரசியலுக் குள் நுழைந்தால், துப்பாக் கிக் குண்டைச் சந்திக்க நேரலாம் என்றும், எதிர்ப்புக்கள், விமர்சனங்களுக்கு முகம் கொடுக்க நேரலாம் என்கிற பெரிய பயமும் பெண்களிடம் உள்ளது.
அதுமட்டுமன்றி பல திறமைகள், ஆளுமைகள் இருந்தபோதிலும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாகவும் பெரும்பாலான பெண்கள் அரசி யலில் ஈடுபட விரும்புவ தில்லை.
கடந்த காலத்தில் அரசியலில் பெண்கள் கடும் ஈடுபாடு காட்டியதில்லை
எல்லா ஆளுகை மட்டங்களிலும் பெண்களால் பிரதிநிதித்து வத்தைப் பெறமுடியும். ஆனால் அவர்கள் அதில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. அரசியலில் பெண்களுக்கான முக்கியத்து வம் தொடர்ந்து வழங்கப்படவேண்டும். ஆண்களுக்கு நிகரான, ஆண்களை விடவும் மேம்பட்ட திறமைகளுடன் ஏராளமான பெண்கள் உள்ளனர்.
அவர்களது திறமைகளை வௌிப்படுத்துவதற்கு தற்போது உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் மூலம் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனைப் பெண்கள் தவறவிடுவது ஆணாதிக்கத்தை வலிமைப்படுத்தும் என்பதை எவ்வொரு பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அண்மைய காலங்களில் பெண்கள், சிறுமிகள் மீதான பலதரப்பட்ட வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங் களை நன்கு உணர்ந்தவர்கள் பெண்கள். ஆதலால் தீர்மா னங்களை எடுக்கும்போது தமது கருத்துகளை முன்வைக்க முடியும். சமாதான செயற்பாடுகள், சுனாமி, மீள் குடியமர்வு போன்ற பெண்களைப் பாதிக்கும் விடயங்கள், தேசிய சர்வதேச ரீதியில் பால்நிலை வேறுபாட்டுப் பிரச்சினைகள், பெயரளவில் இருக்கும் மகளிர் அமைப்புக்களின் பிரச்சினை கள் போன்றவற்றுக்கு தீர்மானங்கள் எடுக்கும்போது பெண்களின் கருத்துக்கள் மிக மிக அவசியமாகின்றன.
தேர்தல் காலங்களில் பெண்களின் வாக்குப்பலம் அதிகமாக உணரப்படுகிறது. வாக்காளர்களில் அரைப் பங்குக்கும் மேலானவர்கள் பெண்களாக உள்ளதால், வெற்றிக்குரியவரைத் தீர்மானிக்கும் சக்தி பெண்களிடமே உண்டு. அதேவெற்றிக்குரியவர் பெண்ணாக பதவிக் கதிரையில் அமரும்போது, குடும்பங்களில், கிராமங்களில், சமூகங்களில் பெண்களின் பிரச்சினைகள் இலகுவாகத் தீர்க்கப்படும்.
பெண்கள் அரசியலுக்குள் அதிகமாக நுழையும்போது சமூகத்தில் பெண்கள் சம்பந்தமான பிரச்சினைகள் ஓரங்கட்டப்படுவதுடன், இரண்டாம் மட்ட
நிலையும் அற்றுப்போகும் என்பதில் ஐயமில்லை.
அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் வேண்டி ஓங்கி ஒலிக்கும் குரல்கள்
பெண்களுக்கு 30 வீத பிரதி நிதித்துவம் வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கைகள் வைக்கப்பட்டபோதும் தொடர்ந்து மாறி மாறி வந்த அரசு கள் அதனைச் செவிமடுக்கவில்லை. 2003 ஆம்ஆண்டில் பெண்களுக்குரிய பங்குவழங்கப்பட வேண்டும் என பெண்கள் குழுக்களும், பெண்கள் விவகார அமைச்சும் பரிந்துரைத்தன.
காலம் கனிந்தது.
நடக்கப் போகும் உள்ளூராட்சித் தேர்தலில் 25வீத பிரதிநிதித்துவம் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற எமது பெண்கள் முன்வர வேண்டும். தற் துணிவும், தன்னம்பிக்கையும், நேர்கொண்ட சிந்தனையும், பெண்ணிய சிந்தனையும் கொண்ட பெண்களைத் தேடிப்பிடித்து தேர்தலில் நிறுத்தி ஆதரவு கொடுத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
போரினால் வடக்கு,கிழக்கில் எண்ணுக்கடங்காத பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உருவாகி உள்ளன. இவர்களில் திறமையானவர்களை களத்தில் இறக்க வேண்டும். இட ஒதுக்கீட்டை பொருத்தமான பெண்கள் சரிவரக் கைப்பற்ற வேண்டும். பன்முக ஆளுமை கொண்டவர்கள் பதுங்கி வாழாது ஒதுக்கப்பட்ட இடத்தை முழுமையாக நிரப்ப வேண்டும். ஆக, வேட்பாளராக நிற்கப் போகும் பெண்களுக்கு முழு ஆதரவையும் பெண்கள் வழங்குங்கள்.
அவர்கள் சோர்ந்து போகாது தோல்வியைப் பற்றிச் சிந்திக்காது உறுதியாக நிற்க அவர் களைத் தட்டிக்கொடுங்கள். அனுதாபத்தால் வாக்குப்பெறுவதோ இடம் நிரப்புவதோ தேவையில்லை ‘‘என்னால் முடியும்’’ என நின்று வெற்றி பெற்று மனித இனச் சமன்பாட்டை சமூக வௌியில் நிலை நிறுத்த, ஆளுமையுள்ள பெண்களையே களமிறக்குங்கள்.
எதிர்காலத்தில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க, தடைகளை உடைத்தெறிய பெண்களே அரசியலுக்குள் நுழையுங்கள். தயாரா பெண்களே…?