தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு இந்துத்வாவின் சீடரான, தம்மா சூர்ய நாராயண சாஸ்திரியை துணைவேந்தராக நியமித்திருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு இந்துத்வாவின் சீடரான, தம்மா சூர்ய நாராயண சாஸ்திரியை துணைவேந்தராக நியமித்திருப்பதற்கு தி.மு.க. சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக சட்டம் 1996ல் குறிப்பிட்டுள்ள விதி 12(1) மற்றும் 12(2) படி, சர்ச் கமிட்டி இறுதிசெய்து கொடுக்கும் மூன்று பேரில் ஒருவரைத்தான் ஆளுநர், வேந்தர் என்றமுறையில் நியமிக்க வேண்டும் என்று கூறுகிறது.
அதுமட்டுமின்றி, ஒரு வேளை சர்ச் கமிட்டி அளித்திருக்கும் மூன்று பெயர்களில் ஆளுநருக்கு உடன்பாடு இல்லை என்றால், அவர் முன்பு இருக்கும் ஒரே வழி, புதிதாக ஒரு சர்ச் கமிட்டியை நியமிக்க உத்தரவிடுவதுதானே தவிர, சர்ச் கமிட்டி பரிந்துரைத்த மூன்று பேரில் இல்லாத ஒருவரை துணைவேந்தராக நியமிப்பது அல்ல.
பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநரே பல்கலைக்கழக சட்டத்தை மீறியிருப்பது ஆரோக்கியமான செயல்பாடு அல்ல. அதிலும் தி.மு.க. ஆட்சி இருந்தபோது, இதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான சூரிய நாராயண சாஸ்திரியை அதே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்திருப்பது, “சட்டத்தின் ஆட்சியை” மீறிய எதேச்சாதிகாரமான நடவடிக்கையாக அமைந்து, ஆளுநரின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
புகழ்மிக்க ஒரு பல்கலைக்கழகத்திலேயே, ‘ஒழுங்கு நடவடிக்கைக்கு’ உள்ளானவரை, சங் பரிவார் நிழலில் வாழ்ந்து வந்த ஒருவரை, துணைவேந்தராக நியமிப்பது சட்டத்தின் ஆட்சிமீது பெருத்த அவ நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதை ஆளுநருக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஆகவே, ஆளுநர் மாளிகையை அரசியலுக்குப் பயன்படுத்த மாட்டேன் என்ற வாக்குறுதியை நிலைநாட்ட, சங் பரிவார அமைப்புகளுடன் தொடர்புள்ள, ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகி, கறை படிந்திருக்கும் தம்ம சூர்ய நாராயண சாஸ்திரியை டாக்டர் அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக நியமித்திருப்பதை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் திறமையானவர்கள் பலர் இந்தப் பதவிக்கு தகுதியானவர்களாக இருக்கும் போது, தமிழகத்திலிருந்து துணைவேந்தர் பதவிக்கு தகுதியான பலர் விண்ணப்பித்துள்ள நிலையில், இப்படி துணைவேந்தரை வெளிமாநில கல்லூரிகளில் இருந்து இறக்குமதி செய்து, தமிழகத்தை இழிவுபடுத்துவதைக் கட்டாயம் தவிர்க்கும் படியும் ஆளுநரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

