தேன் எடுக்கச் சென்றவரை தாக்கிய கரடி

239 0

வவுனியா – ஓமந்தை கொம்புவைத்தகுளம் வனப்பகுதியில் தேன் எடுக்கச் சென்ற நபரொருவர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளதாக ஓமந்தை ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓமந்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் மேலும் இருவருடன் நேற்று (18) தேன் எடுப்பதற்காக வனப்பகுதிக்கு சென்றுள்ள போது, குட்டிகளுடன் இருந்த கரடியால் அவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் தேன் எடுக்க சென்ற போது 6 குட்டிகளுடன் இருந்த கரடிக்கூட்டம் ஒன்றில் மாட்டிக்கொண்ட குறித்த நபரை இரண்டு கரடிகள் தாக்கியதாகவும் அதனை பார்த்து தாங்கள் இருவரும் கூச்சலிட்டதை தொடர்ந்து கரடிக்கூட்டம் பின் வாங்கியதாகவும் தாக்குதலுக்குள்ளான நபருடன் சென்ற இருவரும் தெரிவித்தனர்.

பின்னர் ஏனைய இருவரும் இது தொடர்பில் தமது உறவினர்ளுக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததை தொடர்ந்து உறவினர்கள் சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸாருக்கு அறிவித்துள்ள பொலிஸாருடன் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த நபரை வனப்பகுதியில் இருந்து மீட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான நபரின் பாதத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளதோடு, அவரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார், வவுனியா வனவிலங்கு அலுவலகத்தின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதுடன் ஓமந்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment