கியாஸ் சிலிண்டரில் அடைத்து சாராயம் கடத்தல்

327 0

201609061514281168_Liquor-in-LPG-gas-cylinder-seized_SECVPFமுழுமையான மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் சாராயத்தை கியாஸ் சிலிண்டரில் அடைத்து கடத்திவந்த பலே பேர்வழிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதியில் இருந்து பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. நாட்டின் எந்தப்பகுதியிலும் சொட்டு சாராயம்கூட கிடைக்காமல் மதுவறண்ட மாநிலமாக பீகார் மாறிவிட்டதால் அம்மாநில குடிமகன்கள் போதையை தேடி பிறநாட்டு எல்லைக்குள்ளும் ஊடுருவ துணிந்து விட்டனர்.

அவ்வகையில், பீகாரின் சிதாமாரி மாவட்ட எல்லையோரம் அமைந்துள்ள அண்டை நாடான நேபாளத்தின் ரவுட்டஹாட் மாவட்டத்துக்குள் நுழைந்து குடித்துவிட்டு, கும்மாளம் போட்ட 70 பேரை அந்நாட்டு போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.

ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் இனி நேபாளத்துக்குள் நுழைய மாட்டோம் என்ற வாக்குறுதியையும் எழுதி வாங்கிய பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், போலீசாரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு நவீன பாணியில் பலர் சாராயத்தை கடத்தி விற்று தொழில் செய்து வருகின்றனர்.

அண்டை மாநிலமான ஜார்கண்டில் இருந்து சாராயத்தை வாங்கும் நபர்கள் சினிமா பாணியில் மிக சாதுர்யமாக பீகாருக்குள் கடத்தி வருகின்றனர். இவர்களை கண்டுபிடிக்க போலீசார் கண்களில் விளக்கெண்ணெய் விடாத குறையாக கண்காணித்து வருகின்றனர்.

அவ்வகையில், ஜார்கண்ட் – பீகார் எல்லைப்பகுதி வழியாக வந்த ஒரு வாகனத்தை மடக்கி சோதனையிட்ட கோவிந்த்பூர் பகுதி போலீசார் ஒரு கியாஸ் சிலிண்டருக்குள் 149 சாராய பாக்கெட்களை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதற்கென அந்த சிலிண்டரை வெட்டி, சிறிய கதவுபோன்ற ஒரு அமைப்பை உருவாக்கி, வழக்கமாக சாராயம் கடத்திவந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.