அரசாங்கத்தின் அராஜகம் ஆனது இன்னும் தீரவில்லை, அடக்கு முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
கேப்பாபுலவு மக்களது நிலமீட்பு போராட்டம் இன்று ஒருவருடம் கடந்துள்ள நிலையில், இன்று மக்களது போராட்ட இடத்துக்கு வருகை தந்து கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கேப்பாபுலவு மக்களின் அகிம்சை போராட்டம் ஆண்டு ஒன்றினை கடந்துள்ள நிலையில் அரசாங்கத்தின் அராஜகம் ஆனது இன்னும் தீரவில்லை, அடக்கு முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்பது இங்குள்ள வெகுஜென போராட்டங்களை மக்கள் தொடர்ந்து நடத்துவதில் இருந்து அறியமுடிகின்றது.
அரசாங்கத்தின் அராஜக போக்கினை அரசு கை விட்டுவிட்டு கேப்பாபுலவு மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும். அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்தெந்த இடத்தில் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதோ அவற்றையும் விடுவித்து மக்களுக்கான நியாயமான தீர்வுகள் கிடைக்க வேண்டும் என்பதை கேட்டுகொள்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

