அம்பாறையில் இடம்பெற்ற வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முதலாம் திகதி அம்பாறை மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க ஒன்றிணைந்த பள்ளிவாசல் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
நேற்று முன்தினம் அதிகாலை உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணத்தினால் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த கடையுரிமையாளர் தாக்கப்பட்டு அதனை அண்மித்த பகுதியில் உள்ள பள்ளிவாசல், மோட்டார்வண்டிகள் மற்றும் இஸ்லாமிய மத குர்ஆன் ஆகியன சேதப்படுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக சரியான முறையில் பொலிஸார் விசாரணை நடத்த வேண்டும் எனவும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் பல கோரிக்கைகளை முன்வைத்தே ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எல்.எம். ஹனிபா தெரிவித்தார்.
அத்துடன் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வர்த்தக நிலையங்கள், தனியார் வங்கிகள் மூடப்பட்டு தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

