லாரியஸ் சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் சிறந்த கம்பேக் விருதுகளை பிரபல டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் தட்டிச் சென்றார்.
சர்வதேச அளவிலான லாரியஸ் விளையாட்டு விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. இதில் சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் சிறந்த கம்பேக் விருதுகளை சுவிசர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் வென்றார்.
கடந்தாண்டு ஆஸ்திரேலியா ஓபன் மற்றும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் கோப்பைகளை பெடரர் வென்றிருந்தார். அதன்பின் காயம் காரணமாக சிறிது காலம் டென்னிஸ் விளையாடாமல் இருந்தார். மீண்டும் இந்த ஆண்டு நடந்து முடிந்த ஆஸ்திரேலியா ஓபனில் களமிறங்கிய அவர், அந்த பட்டத்தை வென்றதோடு, சர்வதேச ஆடவர் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தையும் பெடரர் பிடித்தார்.
இதன்காரணமாக அவருக்கு லாரியஸ் சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் சிறந்த கம்பேக் விருதுகள் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பெடரர் கூறுகையில், “இது மிகவும் சிறப்பான ஒரு தருணம். இந்த விருதுகளை நான் எவ்வளவு மதிக்கிறேன் என எல்லோருக்கும் தெரியும். இன்னும் ஒரு விருது வென்றால் சிறப்பாக்க இருக்கும் என எண்ணினேன். ஆனால், இரண்டு விருதுகள் வென்றது மிகப்பெரிய விஷயம். கடந்த ஆண்டு என் வாழ்வில் மறக்க முடியாதது. மோசமான 2016ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் வந்து இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றது, இப்போது இந்த விருதுகளை பெற்றுள்ளது எல்லையற்ற மகிழ்ச்சையளிக்கிறது”, என்றார்.

சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை, டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பெற்றார். கடந்த ஆண்டு தனது 23-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை அவர் வென்றார். இந்த லாரியஸ் விருதுகளை செரீனா 5 முறை பெற்றுள்ளார்.

