முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் காணிகளை கடற்படைக்கு வழங்க முடியாது!

215 0

“முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள மக்களுடைய காணியில் ஒரு துண்டு காணியை கூட கடற்படைக்கு வழங்க முடியாது” என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று (26) இடம்பெற்றுவரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனால் கொண்டுவரப்பட்ட தீர்மானமே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியில், கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ளது.

குறித்த காணியை கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கும் முயற்சிகள் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டபோதும், பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (22) அளவீடு செய்யப்படும் என காணி நில அளவை திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டமைக்கு அமைய சுவீகரிப்பை கைவிடுமாறு கோரி பொதுக்கள், காணி உரிமையாளர்கள் முகாமுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும், வேறு பாதையூடாக, நில அளவையாளர்கள் இராணுவ முகாமுக்குள் சென்றுவிட்டதாகவும் அவர்கள் வெளியேற வேண்டும் எனவும், நில அளவீட்டை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்து வட்டுவாகல் பாலத்தை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நில அளவையைக் கைவிடுவதாகவும், முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடப்படும் எனவும்  எழுத்து மூலமாக தெரிவித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நில அளவை கைவிடப்படுவதாகவும், எதிர்வரும் 26 ஆம் திகதி (இன்று) இடம்பெறவுள்ள முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என தெரிவித்து, கரைத்துறைப்பற்று பிரதேச செயலரின் கையொப்பத்துடனான கடிதத்தை மேலதிக அரசாங்க அதிபர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் கையளித்தார்.

இதனையடுத்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று (26) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த விடயம் ஆராயப்பட்டு, குறித்த காணிகளை கடற்படைக்கு வழங்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a comment