தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க முன்வரும் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துவது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது.அதேவேளை, ஈ.பி.டி.பி. மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் பேச்சு நடத்தக் கூடாது என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டம் கொழும்பில் நேற்று மாலை 5.30 மணி தொடக்கம் 6.30 மணி வரை நடைபெற்றது.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் செயலர் ந.சிறிகாந்தா புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 40 சபைகளில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட கட்சியாக உள்ளது. இந்தச் சபைகளில் மக்கள் விரும்பியவாறு ஆட்சி நிர்வாகங்களை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

