சீனாவின் கிங்யுவான் நகரத்தில் கழிவுகள் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 9 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கிங்யுவான் நகரத்தில் கழிவுகள் பதப்படுத்தும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று அதிகாலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல, கழிவுகளை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.அப்போது அங்கு சற்றும் எதிர்பாராத வகையில் தீப்பிடித்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் பரவத்தொடங்கியது. அதில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் செய்வது அறியாது ஓலமிட்டனர்.தகவல் அறிந்து, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை முழு வீச்சில் அணைத்தனர்.
ஆனாலும் இந்த தீ விபத்தில் 9 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு விட்டன.
ஒரு தொழிலாளி மட்டும் தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். தீ எப்படி பிடித்தது, அதன் பின்னணி என்ன என்பது குறித்து உடனடியாக தெரியவரவில்லை.