அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பு ஒன்றினை நாளை விடுக்கவுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நாளை ஊடக பிரதானிகளை சந்திக்கவுள்ள நிலையில் இவ் அறிவிப்பினை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பினனர் அரசாங்கத்தில் பல நெருக்கடி நிலைமைகள் எழுந்துள்ளன. தேசிய அரசாங்கத்தின் பிரதான இரண்டு கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மற்றும் புரிந்துணர்வுகள் என்பவற்றின் மத்தியில் நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடக பிரதானிகளை சந்திக்கின்றார். நாளை காலை 8.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறும் இந்த சந்திப்பின் போது அவர் விசேட காரணிகள் குறித்து கூறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அரசாங்கமாக தாம் இணைந்து பயணிப்பது அல்லது தனி கட்சியாக செயற்படுவது என்ற நிலைப்பாட்டை எட்டும் வகையில் பிரதான இரண்டு கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் ஜனாதிபதி தமைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நேற்று முன்தினம் நள்ளிரவு பொது எதிரணி உறுப்பினர்களை சந்தித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணி அமைத்து ஐக்கிய தேசிய முன்னணியாக பயணிப்பது குறித்தும் கலந்துரையாடி வருகின்றனர். இவ்வாறான நிலையிலேயே ஜனாதிபதி சில முக்கிய தீர்மானங்களை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அபேட்சகர்கள் சந்திப்பொன்று இன்று கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறுகின்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனைத்து அபேட்சகர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்மையும் குறிப்பிடத்தக்கது.