மு.க.ஸ்டாலினை முதல்வர் ஆக்குவதே என் லட்சியம்- வைகோ பேச்சு

241 0

மு.க.ஸ்டாலினை முதல்வர் ஆக்குவதே என் லட்சியம் என்று மதுரை பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மதுரை ஓபுளாபடித் துறையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.

இந்த கூட்டத்திற்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் வேலுச்சாமி, தளபதி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-

கடந்த 30 ஆண்டுகளாக தி.மு.க.வுக்காக உழைத்து உள்ளேன். 14 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. கொடி பறக்கும் மேடையில் பேசுகின்றேன். இந்த மேடையில் பேசுகின்ற போது எனக்கு கடந்த கால நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. தாய் கழகமான தி.மு.க.வை காப்பதே என் கடமை.

எத்தனை கட்சிகள் முளைத்தாலும், தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. எனக்கு அடையாளம் கொடுத்தவர் கருணாநிதி. திராவிட இயக்கத்தை காப்பதற்கு தி.மு.க.வை ஆதரிப்பது எனது கடமையாகும்.

திராவிட இயக்கம் இல்லாத தமிழகம் என்று சிலர் பேசுகிறார்கள். இந்த திராவிட இயக்கத்தை அழிக்க நினைத்தால் வேலும், வாளுமாக நின்று தடுப்பேன்.

திராவிட இயக்கத்தை என் உயிருக்கு மேலாக நேசிக்கிறேன். நான் தி.மு.க.வில் இருந்த போதும், தி.மு.க. கூட்டணியில் இருந்த போதும் பலமுறை வெற்றி பெற்றதை மறைத்து விட்டு சிலர் விமர்சனம் செய்கிறார்கள். எதையும் எதிர்பாராமல் களத்தில் நிற்கும் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான் என் குறிக்கோள்.

தி.மு.க.தலைவர் கருணா நிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தேன். அவரிடம் மு.க.ஸ்டாலின், வைகோ தி.மு.க. கூட்ட ணிக்கு வந்து விட்டார் என்றார்.

உடனே கருணாநிதியிடம் உங்களோடு ஒன்றாக இருந்தபோது எப்படி நிழலாக, கேடயமாக இருந்தேனோ, அதே போல மு.க.ஸ்டாலினுடன் இருப்பேன் என்று அவரிடம் உறுதி அளித்திருக்கிறேன்.

மு.க.ஸ்டாலினை முதல்வர் ஆக்க வேண்டும் என்பது தான் என் லட்சியம். எனக்கு பதவி ஆசை கிடையாது.

மத்தியில் ஆளும் மோடியின் ஆட்சி நாட்டுக்கு கேடு. மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசு மோடி அரசின் கொத்தடிமையாக செயல்பட்டு வருகிறது.

இந்த அரசை தூக்கி எறிய வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். தேர்தலை சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., தி.மு.க. மருத்துவரணி மாநில துணைத் தலைவர் டாக்டர் சரவணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன், இளைஞரணி துணைச்செயலாளர் கீரைத் துறை பாண்டியன், காங்கிரஸ் மாவட்டத்தலைவர் கார்த்திகேயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வாசுகி, இந்திய கம்யூனிஸ்டு சேதுராமன், பார்வர்டு பிளாக் கதிரவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Leave a comment