வலிந்து காணாமற்போனவர்கள் எவரும் எங்கும் தடுத்துவைக்கப்படவில்லை!

2990 0

வலிந்து காணாமற்போனவர்கள் எவரும் எங்கும் தடுத்துவைக்கப்படவில்லையென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைவிரித்துள்ளார்.அத்துடன் அவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்குமெனவும் அத்துடன் தேவையான உதவிகளையும் வழங்குவோமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் பரப்புரைகளிற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில் 2017 இல் வடக்கிற்கு வீடுகட்டவும் மீள்குடியேற்றத்திற்கும் அனுப்பிய பணத்தில் 60 வீதம் மீளத்திருப்பப்பட்டுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்.குடாநாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வாகனங்களில் ஏற்றிவரப்பட்ட மக்கள் முன்னிலையில் அவர் உரையாற்றுகையில் வடக்கு முதலமைச்சரை குற்றம் சுமத்தும் வகையில் இதனை தெரிவித்தார்.

இதனிடையே திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, அரசாங்கம் வடக்கு மாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில்லை என்று வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“வடக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, திட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வுகளுக்கு மாத்திரம், வடக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் எனக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
அரசாங்கம் அத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, முதலில் மாகாணசபையுடன் கலந்தாலோசனை நடத்த வேண்டும். அதனுடன் இணைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் வடமாகாண சபையில் அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a comment