சிரியா: ரஷியா ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள் – விமானி பலி

258 0

சிரியாவில் ரஷியா ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதில் அதன் விமானி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிபர் பசார்-அல்- ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்கள் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர். சிரியா ராணுவத்துக்கு ரஷியா உதவி புரிந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ரஷியா நாட்டின் போர் விமானங்கள் நடத்தும் வான்வழி தாக்குதல்களில் கிளர்ச்சியாளர்கள் உட்பட பல பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இத்லிப் மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள சாராகூப் நகரில் உள்ள கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்காக ரஷியாவின் போர் விமானம் ஒன்று பறந்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து கிளர்ச்சியாளர்கள் விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் அந்த போர் விமானத்தை தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ரஷியாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதிலிருந்த விமானி பலியானதாகவும் கிளர்ச்சியாளர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து சிரியாவும், ரஷியாவும் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

Leave a comment