ஊரக வேலை வாய்ப்பு திட்டம் முடங்கும் அபாயம்: ராமதாஸ் அறிக்கை

241 0

நிதி ஒதுக்கீடு குறைப்பால் ஊரக வேலை வாய்ப்பு திட்டம் முடங்க வாய்ப்பு உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஊரகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்திற்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.55,000 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை விட இது அதிகம் தான் என்றாலும் ஊரக மக்களுக்கு ஓரளவுக்கு வேலை வழங்குவதற்குக் கூட இந்த நிதி போதுமானதல்ல என்பது தான் அனுபவப்பூர்வ உண்மையாகும்.

கிராமப்புறங்களில் உள்ள ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவது தான் இத்திட்டத்தின் நோக்கம் என்றாலும் கூட, சராசரியாக 50 நாட்களுக்குக் கூட வேலை வழங்கப்படுவதில்லை என்பது தான் உண்மையாகும். இதற்குக் காரணம் நிதிப்பற்றாக்குறை தான். 2018-19ஆம் ஆண்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திற்கு ரூ.55,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்தாலும் கூட உண்மை இதுவல்ல. காரணம் இந்த ஒதுக்கீட்டில் பெரும்பகுதி பழைய கடன்களை அடைப்பதற்கே செலவாகிவிடும். இத்திட்டத்திற்கு போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாததால் 2012-13 ஆம் ஆண்டில் பயனாளிகளுக்கு ரூ.2034 கோடி ஊதிய நிலுவை ஏற்பட்டது. இது படிப்படியாக அதிகரித்து 2016-17 ஆம் ஆண்டின் முடிவில் ரூ.13,220 கோடி ஆனது.

கடந்த காலங்களில் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 23 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டு வந்தது. ஆனால், வரும் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு வெறும் 15 சதவீதம் மட்டுமே அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

இது போது மானதல்ல. அதுமட்டுமின்றி இந்தியாவின் 12 மாநிலங்களில் கடுமையான வறட்சி நிலவுவதால் அங்கு இத்திட்டம் கூடுதல் நாட்களுக்கு செயல்படுத்தப்பட வேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எந்த வரையரைக்குள்ளும் அடங்காமல் பெயரளவுக்கு மட்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட ஒதுக்கீட்டை அதிகரித்திருப்பது யாருக்கும் பயனளிக்கப்போவதில்லை.

2017-18 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக ரூ.48,000 கோடி வழங்கப்பட்ட நிலையில், அந்தத்தொகை முதல் 6 மாதங்களில் செலவழிக்கப்பட்டது. அதனால் கடந்த செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு பயனாளிகள் யாருக்கும் ஊதியம் வழங்கப்படாமல் திட்டம் முடங்கிக் கிடக்கிறது.

வரும் ஆண்டில் 6 மாதங்களுக்கு முன்பே இத்திட்டம் முடங்கும் வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்கும் வகையிலும், ஊரக மக்களுக்கு நியாயமான காலத்திற்கு வேலை வழங்கும் வகையிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a comment