பஞ்சாப்: கல்லூரி மாணவர்கள் போராட்டம் – துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த டிஎஸ்பி.யின் பாதுகாவலர் மரணம்

325 0

பஞ்சாப் மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த டி.எஸ்.பி.யின் பாதுகாவலர் உயிரிழந்தார்.

பஞ்சாப் மாநிலம் பரித்கோட் அருகே உள்ள ஜைட்டுவில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி மாணவர்கள் இருவரை சில தினங்களுக்கு முன்னர் போலீசார் கைது செய்துள்ளனர். இதனால், கொந்தளித்த மாணவர்கள் நேற்று முன்தினம் (29-ம் தேதி) கல்லூரி திறந்ததும் போராட்டத்தில் இறங்கினர்.

போராட்டத்தை கட்டுப்படுத்த டி.எஸ்.பி பால்ஜிந்தர் சிங் சந்து தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது, மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த பதற்றமான சூழலில் திடீரென துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் டி.எஸ்.பி பால்ஜிந்தர்சிங் சந்து மற்றும் அவருடைய பாதுகாவலர் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனை அடுத்து இருவரும் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் டி.எஸ்.பி பால்ஜிந்தர்சிங் சந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த டி.எஸ்.பி.யின் பாதுகாவலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த பாதுகாவலர் நேற்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் டி.எஸ்.பி பால்ஜிந்தர் சிங் சந்து தனது துப்பாக்கியால், அவரது காவலரை சுட்டுக்கொண்டு பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக தெரிகிறது. ஆனால் அவர் எதற்காக அவ்வாரு செய்தார் என்பதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இரண்டு போலீசாரின் மரணத்திற்கு அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.

Leave a comment