முப்படைகளின் அபிவிருத்தி செயற்திட்ட மீளாய்வு சிறிசேன தலைமையில்

542 0

முப்படையினரதும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினதும் தொழிற்பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு பற்றிய கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

பொதுமக்களின் நிதியை பெருமளவில் சேமிக்கும் வகையில் மிக வினைத்திறனுடன் முப்படையினர் உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு வழங்கப்பட்டுவரும் தொழிற்பங்களிப்பினை பாராட்டிய ஜனாதிபதி அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களில் தற்போது மேலெழுந்துள்ள பிரச்சினைகள் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் முன்வைக்கப்பட்டன.

முப்படையினரின் தொழிற்பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுவரும் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தினதும் திருக்கோணமலை மாவட்ட அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்தப்படும் ”சிறிசர” செயற்திட்டத்தினதும் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டதுடன், சிறிசர செயற்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 14 குளங்களின் அபிவிருத்தி செயற்பாடுகள் தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டிருப்பதுடன், மேலும் 10 குளங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டது.

அத்துடன் அக்குரேகொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பாதுகாப்பு படை தலைமையகத்தின் நிர்மாணப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

விமானப் படையினரின் தொழிற்பங்களிப்புடன் அநுராதபுரம் மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் சிறுநீரக மத்தியநிலையத்தின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் கடற்படையினரின் தொழிற்பங்களிப்புடன் சிறுநீரக நோயினால் துயருரும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக நிர்மாணிக்கப்பட்டுவரும் நீர் சுத்திகரிப்பு தொகுதிகளின் நிர்மாணப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலாளர்
ஆர்.பி.ஆர்.ராஜபக்ஷ, பாதுகாப்பு படைகளின் பதவிநிலை பிரதானி அட்மிரல் ரவீந்தர விஜேகுணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனானாயக்க, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, இலங்கை கப்பற்படையின் பதவிநிலை பிரதானி ரியல் அட்மிரல் என்.பி.ஜே.ரொசைரோ, சிசில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம உள்ளிட்ட பாதுகாப்பு துறை பிரதானிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்

Leave a comment