மாஸ்கோவில் போராட்டம்: ரஷிய நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் கைது

235 0

மாஸ்கோ நகரில் கிரெம்ளின் மாளிகை அருகே இன்று போராட்டம் நடத்தச் சென்ற ரஷிய நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

ரஷிய அதிபர் பதவிக்கு வரும் மார்ச் மாதம் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் நியாயமாக நடைபெறாது. எனவே, பொதுமக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க கூடாது என எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவல்னி வலியுறுத்தி வருகிறார்.
இந்த கருத்தை முன்வைத்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபடுமாறு தனது கட்சியினரை அவர் கேட்டு கொண்டுள்ளார். மாஸ்கோ நகரில் கிரெம்ளின் மாளிகை அருகே இன்று நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த அலெக்சி நவல்னி-யை புஷ்கின்ஸ்கயா சதுக்கம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்து, வேனில் ஏற்றிச் சென்றனர்.
முன்னதாக, இன்று காலை எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த போலீசார் அங்கிருந்த அனைத்து அறைகளிலும் தீவிரமாக சோதனையிட்டனர். வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடைபெற்றதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நான் கைதானதை கண்டு திகைத்து விடாமல் இந்த தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் போராட்டத்தை நம் கட்சியினர் ஆங்காங்கே நடத்த வேண்டும் எனவும் சமூக வலைத்தளம் மூலம் அலெக்சி நவல்னி அறிவுறுத்தியுள்ளார்.

Leave a comment