தபால் மூல வாக்களிப்பு நாளை நிறைவு

347 0

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கு இன்றும் , நாளையும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தபால் மூல வாக்குப் பதிவு திங்கட்கிழமை ஆரம்பமானது. திங்கள் , வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏதோவொரு காரணத்தினால் வாக்களிக்கத் தவறிய வாக்காளர்கள் அடுத்த மாதம் முதலாம் , இரண்டாம் திகதி வாக்குகளை பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அன்றைய தினங்களில் தமக்குரிய மாவட்ட தேர்தல் அலுவலகத்திலோ, கொழும்பிலுள்ள தேர்தல் செயலகத்திலோ வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்குப் பதிவை கண்காணிப்பதற்கு தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தும் கண்காணிப்பாளர்களை பயன்படுத்த முடியும். இவர்களுக்கு அப்பால் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளின் துணையை நாட முடியும்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரித்த அடையாள அட்டைகளில் ஒன்றை சமர்ப்பிப்பது அவசியமானது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment