துப்பாக்கிச்சூட்டில் காட்டு யானை பலி

254 0

மட்டக்களப்பு வாகரை பகுதியில் காட்டு யானை ஒன்று துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வாகரை தோணிதாண்டமடு வயல்வெளி பிரதேசத்தில் பெண் யானை ஒன்று காயமடைந்து  சோர்வுற்ற நிலையில் நடக்கமுடியாதவாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுந்துகிடந்துள்ளதை அவதானித்த பொதுமக்கள், பிரதேச வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் அதனை குணப்படுத்தும் முகமாக மருத்துவ சிகிச்சையளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை மாலை குறித்த காட்டு யானை உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

தற்போது யானையின் சடலத்தினை குறித்த பிரதேசத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாராணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment