தமிழ் பாடசாலை அதிபரை முழந்தாளிட்டு மன்னிப்புக் கேட்கவைத்துள்ளமை இனவாதத்தின் அதி உச்சநிலையாகும் – அனந்தி சசிதரன்

3632 0

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை, ஊவா மாகாண முதலமைச்சர் தன்முன்னிலையில் முழந்தாளிட்டு மன்னிப்புக் கேட்கவைத்துள்ளமை சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அதி உச்ச நிலையாகும் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தனது பரிந்துரைக் கடிதத்துடன் சென்ற பாடசாலை மாணவியை பாடசாலையில் சேர்க்க மறுத்த பதுளை மகளிர் மகா வித்தியாலைய பெண் அதிபர் பவானியை நேரில் அழைத்து ஊவா மாகாண முதலமைச்சர் தன் முன்னிலையில் முழந்தாளிட்டு மன்னிப்பு கேட்கவைத்துள்ளமை குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்..

மாகாணத்தை ஆளும் முதலமைச்சர் என்ற நிலை கடந்து ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க இனவாதியாக செயற்பட்டுள்ளதன் வெளிப்பாடாகவே தமிழ் ஆசிரியை மீதான இக் கொடுமை அரங்கேறியுள்ளது. போகிற போக்கில் நடைபெறும் சம்பவமாக இல்லாது ஆழமான இனத்துவேசம் மற்றும் அதிகார அத்துமீறலின் உச்ச வெளிப்பாடாக நடந்தேறியுள்ள இச்சம்பவம் வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

ஆங்கிலேயர் கையில் இருந்து சிங்களர் கையிற்கு ஆட்சி-அதிகாரம் மாற்றமடைந்த பின்னர் சிங்கள பௌத்த பேரினவாத மனோநிலை இலங்கையின் சகல நிர்வாக மட்டத்திலும் கோலோச்சியிருந்தது. அதன் உச்ச நிலையே முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய, மானுடமே வெட்கித் தலைகுனியும் தமிழினப்படுகொலையாகும்.

அக்காலகட்டத்தில் அலுவலகங்களில் பணியாற்றிய தமிழ் ஊழியர்களை சிங்கள ஊழியர்கள் இனரீதியாக வேறுபடுத்தி கேலி கிண்டல் செய்துவந்ததுடன் துன்புறுத்தியும் வந்திருந்தமை, தமிழர்களின் தன்னுரிமைக்கான விடுதலைப் போராட்டத்திற்கான காரணங்களில் முன்னிலை பெற்று விளங்கியது என்பதனை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாத உண்மையாகும்.

உலகம் ஆயிரம் சொன்னாலும் தமிழீழ விடுதலைப் போராட்டமே தமிழர்களின் காப்பரணாகத் திகழ்ந்து வந்தது என்பதை இது போன்ற நிகழ்வுகள் துலாம்பரமாக எடுத்தியம்பி வருகின்றது. ஆயுத மௌனிப்பின் பின்னர் மீண்டும் தமிழர்களை கிள்ளுக் கீரையாக கருதி சீண்டும் இனவாதப் போக்கு அதிகரித்திருந்தது. அது தற்போதைய நல்லாட்சி அரசின் காலத்திலும் தொடர்வதையே தமிழ் ஆசிரியையை முழந்தாளிட்டு மன்னிப்புக் கேட்கவைத்துள்ள சம்பவம் காட்டிநிற்கின்றது.

ஊவா மாகாண முதலமைச்சரின் பரிந்துரைக் கடிதத்துடன் சென்றிருந்த குறித்த மாணவியரின் பெற்றோரிடம், கல்வி அதிகாரிகளின் உத்தரவுகள், வழிகாட்டுதல்களுக்கு அமையவே தன்னால் செயற்பட முடியும் என்று நியாயமான காரணத்தை கூறி திருப்பி அனுப்பியதில் தவறேதும் இருந்திருப்பின் நிர்வாக ரீதியில் விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

அதைவிடுத்து தனது இடத்திற்கு அழைத்து ஒரு பெண் என்று கூடப்பாராது அவமரியாதையாக பேசியதோடு நின்றுவிடாது மாகாணக் கல்விப் பணிப்பாளர், மாகாண செயலர் மற்றும் அனுமதி மறுக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் முன்னிலையில் முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைத்துள்ள செயல் இனவாதத்தின் உச்ச நிலையாகும்.

அதைவிட, மத்திய வங்கி பிணை முறி மோசடியை ஏற்று பிரதமர் இராஜினாமா செ;யதால் தானும் இராஜினாமா செய்வேன் என்று ஊவா முதலமைச்சர் பகிரங்கமாக சவால் விடுக்குமளவிற்கு நாட்டின் தலைமைப் பொறுப்பிலும் கறைபடிந்தவர்களே இருந்துவருகின்றார்கள் என்பது மிக மோசமான முன்னுதாரணமாகும்.

இனத்துவேசம் மற்றும் அதிகார அத்துமீறலின் வெளிப்பாடாக குற்றமிழைத்ததுடன் நின்றுவிடாது உண்மையை வெளிப்படுத்த முடியாதளவிற்கு அச்சுறுத்தியும் உள்ளமை இலங்கை நாட்டில் தமிழர் நிலை எவ்வாறு உள்ளதென்பதற்கு சான்றாகும். உண்மைகள் வெளிப்படுத்தப்பட்ட பின்னரான எதிர்ப்புகளையடுத்து முதலமைச்சர் வசமிருந்த கல்வியமைச்சு பறிக்கப்பட்டு ஆளுநரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு மட்டுமல்ல முதலமைச்சர் பதவியும் அவரிடம் இருந்து உடனடியாக பறித்தெடுக்கப்படுவதுடன் அரசியலின் எந்த நிலையிலும் எக்காலத்திலும் அவர் பொறுப்பு வகிக்காதவாறு கடுமையான நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். மக்களை ஆளும் நிலையில் இவ்வாறான குரோத மனப்பாங்குள்ளவர்கள் இருப்பது பேராபத்தாகும். திட்டமிட்டு நடந்தேறிய நிகழ்வாக இல்லாத போதிலும் தனது பரிந்துரையை ஏற்க மறுத்தவர் ஒரு தமிழர் என்பதே அவரை ஆத்திரத்தின் உச்ச நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதென்றால், நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த தமிழர்கள் மீதான வெறுப்புணர்வே காரணமாகும்.

இந்நிலையானது, வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக இலங்கை வரலாற்றை திசைமாற்றிவிடும் பேராபத்தின் அறிகுறியாகவே அமைந்துள்ளது. ஆகவே பெயரளவிற்கு இல்லாது உண்மையான நல்லாட்சியை இலங்கைத் தீவில் நிலைநிறுத்தும் வகையில் ஆட்சியாளர்கள் உளப்பூர்வமாக செயலாற்ற முன்வர வேண்டும் என்று அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment