கதிர்காமத்தில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு புதிய வீடு

257 0

கடந்த வாரம், கதிர்காமம் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயரிழந்தவரின் குடும்பத்துக்கு, புதிய வீடொன்றையும் வர்த்தக நிலையம் ஒன்றையும் அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, மாத்தறை மற்றும் ஹம்பாந்​தோட்டை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் பலியான 25 வயதான நிரோஷன் என்பவர், தமது குடும்பத்தினருடன் வாழ்ந்த வீடானது, பாழடைந்த நிலையில் உள்ளதாலும் அவர்களுக்கான நிரந்தர வருமானத்தைப் பெறுவதற்காகவுமே, மேற்படி புதிய வீடும் வர்த்தக நிலையமும் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாக, பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, நாளை  (25) காலை 11.25 மணிக்குள்ள சுபநேரத்தில், கதிர்காமத்தில் அமைந்துள்ள குறித்த இளைஞனின் வீடு இருந்த இடத்திலேயே, புதிய வீட்டையும் வர்த்தக நிலையத்தையும் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

அத்துடன், உயிரிழந்தவரின் பிள்ளை, உயர்க் கல்வியை நிறைவு செய்யும் வரையான அனைத்துக் கல்விச் செலவுகளையும் மாதாந்தம் செலுத்துவதாக,  கிருளப்பனையில் அமைந்துள்ள camera.lk நிறுவனத்தின் உரிமையாளர் அனுஷ்க குணசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a comment