உலக பொருளாதார மாநாடு: சுவிட்சர்லாந்து அதிபருடன் மோடி சந்திப்பு

1186 0

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டின் இடையே அந்நாட்டின் அதிபருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 48-வது உலக பொருளாதார மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாடு 26-ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று சுவிட்சர்லாந்து வந்து சேர்ந்தார்.
அவருடன் மத்திய மந்திரிகள் சுரேஷ்பிரபு, பியூஸ்கோயல், தர்மேந்திரபிரதான், மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் மற்றும் முகேஷ் அம்பானி, ஆசிம்பிரேம்ஜி, ராகுல்பஜாஜ் உள்ளிட்ட தொழில் அதிபர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். சுவிட்சர்லாந்து வந்த மோடியை அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வென் நேரில் சென்று வரவேற்றார்.
இன்று மாநாட்டின் இடையே சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட்டை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் தகவலை பதிவு செய்துள்ளார் மோடி.
அதில், சுவிட்சர்லாந்து அதிபருடனான சந்திப்பின் போது, இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் உறவுகள்  குறித்து மதிப்பாய்வு செய்ததுடன், அதனை மேலும் பலப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.
மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளையும் மோடி அழைத்து வட்டமேஜை கூட்டம் நடத்தினார்.

Leave a comment