தமிழகத்தில் நெல் அறுவடைக்கு அதிநவீன தொழில்நுட்பம்: அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

672 0

தமிழகத்தில் விவசாயிகளுக்கு நெல் அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகைக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெல் அறுவடை செய்வதற்கு போதுமான விவசாய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இதனை சரிசெய்யும் விதமாக விவசாயிகளுக்கு நெல் அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகைக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வெளிநாடுகளில் குறிப்பாக நெல் அதிகம் விளையும் ஜப்பான், தைவான் போன்ற நாடுகளில் நெல், சோளம், கம்பு போன்ற மானாவாரி பயிர்களை அறுவடை செய்ய மிகக் குறைந்த செலவில் அறுவடை எந்திரம், பவர் டில்லர் போன்றவை பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன.

எனவே, தமிழக அரசும் அறுவடைக்கு அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்திட முன்வர வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி தொடர்ந்து விவசாயத் தொழில் லாபத்தோடு நடைபெறுவதற்கு ஆளும் ஆட்சியாளர்கள் தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment