யாழ்ப்பாணத்தில், வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் அடித்துக்கொலை(காணொளி)

427 0

யாழ்ப்பாணத்தில், வீட்டில் தனியாக வசித்து வந்த 72 வயது மூதாட்டி ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் தலையில் அடிகாயம் காணப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மானிப்பாய் ஆணைக்கோட்டை பொனனையா வீதிப் பகுதியில் இன்று இரவு 7.30 மணியளவில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

72 வயதுடைய ஜெகநாதன் சத்தியபாமா என்ற மூதாட்டியே தலையில் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மூதாட்டி, உறவினர்கள் இன்றி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இவர் நடக்க முடியாதவர் என்றும் சக்கரநாற்காலி மற்றும் ஊன்றுகோல் பயன்படுத்தி நடப்பவர் என்றும் அயலவர்கள் தெரிவித்தனர்.

இவரது பெறாமகன் கிளிநொச்சியில் வசித்து வருகின்றார்.

வழமையாக பெறாமகன் வந்து பார்வையிட்டுச் செல்வதுடன், இவருக்கான உணவுகளை வேறு நபர்களிடம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

நேற்று மதியம் உணவு கொடுக்கும் இளைஞர் வந்து மூதாட்டிக்கு உணவு கொடுத்துவிட்டுச் சென்றார்.

அதேநேரம் இந்த மூதாட்டிக்கு பாதுகாப்பாக அவரது மைத்துனர் ஒருவர், இரவில் மூதாட்டியுடன் தங்குவதாகவும், நேற்று இரவு 7.30 மணியளவில் அந்த வயோதிபர் வீட்டிக்கு சென்ற போது, வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டிருந்ததுடன், மின்சாரம் இன்றி வெளிச்சம் அற்ற நிலையில் வீடு காணப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வயோதிபர் மின்குமிழ்களை ஒளிரச் செய்த போது, மூதாட்டி தலையில் காயங்களுடன் சடலமாக காணப்பட்டார்.

அந்த வயோதிபர் உடனடியாக மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளர்.

சம்பவ இடத்திற்குப் பொலிஸர் சென்று விசாரணைகளை முன்னெடுத்த போது, வயோதிபர் அணிந்திருந்த தோடு மற்றும் மோதிரம் ஆகியவற்றை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூதாட்டியின் நகைகள் காணாமல் போயுள்ளமையால், திருட்டிற்காக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Leave a comment