இலங்கை பாரிய அபிவிருத்திகளை அடைந்து வருவதை அவதானிக்க முடிந்துள்ளது!

206 0

தற்போது நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவி வருவதன் காரணமாக இலங்கை பாரிய அபிவிருத்திகளை அடைந்து வருவதை அவதானிக்க முடிந்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவத்தின் பதவிநிலை பிரதானி ஜெனரல் கமார் ஜாவேத் பஜ்வா (General Qamar Javed Bajwa) தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவ பதவிநிலை பிரதானி நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஏனைய உலக நாடுகள் பாகிஸ்தானிடமிருந்து விலகியிருந்த சந்தர்ப்பத்தில் இலங்கை கிரிக்கட் குழு பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட வரலாற்றுரீதியான விஜயத்தினை நினைவுகூர்ந்த ஜெனரல் கமார் ஜாவேத் பஜ்வா இலங்கை பாகிஸ்தானின் நட்பு நாடாகும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் நீண்டகால தொடர்புகளை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, கடந்த யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்குதல் போன்ற பல உதவிகளை நல்கியமைக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளின்போது பாகிஸ்தானிடமிருந்து கிடைக்கப்பெற்ற அன்பளிப்புகளுக்கும் உதவிகளுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இரு நாடுகளுக்குமிடையேயும் காணப்படும் தொடர்புகளை மேலும் மேம்படுத்தி வலுப்படுத்தவும் விருப்பம் தெரிவித்தார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பினையும் ஜனாதிபதி பாராட்டினார்.

பாகிஸ்தானின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பாக ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்திய பாகிஸ்தானின் பதவிநிலை பிரதானி, பாகிஸ்தானில் அமைதியை உறுதிசெய்வதற்கு தற்போது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், வெகுவிரைவில் அதற்கான பலன்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தின் தொழிற் தகைமைகளை பெரிதும் பாராட்டிய பாகிஸ்தானின் இராணுவ பதவிநிலை பிரதானி (General Qamar Javed Bajwa) இலங்கையின் பாதுகாப்புத்துறை மேம்பாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தனது நாடு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a comment