பொங்கல் தினத்திலும் காணாமல் போன உறவுகளை தேடும் உறவினர்கள்

327 0
காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் பிள்ளைகள் உறவுகளுக்காக வீதியில் இறங்கி போராடி வருகின்றோம், எங்களுக்கான எந்த தீர்வும் இதுவரை இல்லை, எங்களை வீதியில் விட்டவர்கள் வீடுகளில் பொங்கி மகிழ்கின்றனர் என கிளிநொச்சியில் 329 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றில் ஏ9 பிரதான வீதிக்கருகில் தொடர்ச்சியாக 329 வது நாளாக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இன்று (14) தைப்பொங்கல் நாளன்றும் போராட்டக் கொட்டகைக்குள் நல்ல தீர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.

தங்களின் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்காக வீதியில் இறங்கி போராட்டத்தை ஆரம்பித்தாலும், எங்களை வீதியில் இறக்கி போராட வைத்தவர்கள் வீடுகளில் இன்று பொங்கி மகிழ்கின்றனர். அரசுக்கு அழுத்தம் கொடுத்து தீர்வை பெற்றுத் தரவேண்டியவர்கள் அரசுக்கு கண்ணை மூடிக்கொண்டு அதரவு வழங்குகின்றனர்.

அரசுக்கு நெருக்கடி ஏற்படுகின்ற போது அல்லது அரசுக்கு ஆதரவு தேவைப்படுகின்ற போது நிபந்தனையின்றி ஆதரவு வழங்கி வருகின்றார்கள். நாட்டிற்குள் மட்டுமன்றி நாட்டிற்கு வெளியே சென்றும் எங்களின் பிரதிநிதிகள் அரசுக்கு ஆதரவு திரட்டுகின்றனர்.

எங்களுக்காக பேசுவார்கள் என நம்பிய பிரதிநிதிகள் அரசுக்காக மேடையேறி பேசுகின்றார்கள், வாதாடுகின்றர்கள் எனவும் தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இவற்றுக்கெல்லாம் இவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Leave a comment