வயல்காணிகளில் கட்டடங்கள் அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு கோரி ஆர்பாட்டம்

241 0
மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட திருப்பெருந்துறை, கொத்துக்குளம் மாரியம்மன் ஆலயத்தை சூழவுள்ள வயல்காணிகள் நிரப்பப்பட்டு, கட்டடங்கள் அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு கோரி, ஆலய நிர்வாகத்தினரும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்து, ஆலய முன்றிலில், இன்று (10) காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இயற்கை எழில்கொண்ட 300 வருடங்கள் பழமையான ஆலயமாக கொத்துக்குளம் மாரியம்மன் ஆலயம் இருந்து வருகின்றது.

ஆலயத்தின் அழகையும் புனிதத்தையும் பாதுகாக்கும் பகுதியாக ஆலயத்தைச் சூழவுள்ள வயல் பிரதேசம் காணப்படுகின்றது.

வயல் காணிகளை மூடுவதற்கு அரசாங்கம் தடைகளை விதித்துள்ள போதிலும் அவற்றையும் மீறி, குறித்த வயல் காணி மூடப்பட்டு கட்டடம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ஆலய நிர்வாகத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

2000ஆம் ஆண்டு 46ஆம் இலக்க கமநல அபிவிருத்திச் சட்டத்தின் அடிப்படையில், விவசாயக் காணிகள், விவசாய நடவடிக்கைகள் தவிர்ந்த, ஏனைய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த காணியை நிரப்புவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாக, விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறித்த காணி நிரப்பப்படுமானால் அப்பகுதியில் உள்ள ஏனைய விவசாயிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்விவகாரம் தொடர்பில் 2016ஆம் ஆண்டு அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றதாகவும், எனினும் இதுவரையில் கருத்தில் கொள்ளப்படவில்லை எனவும் இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும், கொத்துக்குளம் மாரியம்மன் ஆலய பரிபாலனசபை தலைவர் எஸ்.ருவிகரன் தெரிவித்தார்.

இது தொடர்பான மகஜரொன்றும், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a comment