போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவைத்தொகையை உடனே வழங்க ஐகோர்ட் உத்தரவு

186 0

போக்குவரத்த்து தொழிற்சங்கங்கள் 5 நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் தொழிலாளர்களுக்கான நிலுவைத்தொகையை உடனே வழங்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பெரும்பாலான அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பாமல் 5-வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்கின்றனர். இதனால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தொழிற்சங்கங்கள் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 8 ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை நீடித்து வருகிறது. திடீரென தொழிற்சங்கங்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபடவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே இது தொடர்பான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களிடம் ரூ.5 ஆயிரம் கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பணத்தை கொடுக்க அரசு காலதாமதம் செய்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்போது, இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ஊழியர்களுக்கான ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவற்றை வழங்காதது ஏன்? என்று அரசு வழக்கறிஞரிடம் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர் போக்குவரத்து ஊழியர்களுக்கு 1138 கோடி ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். இதனையடுத்து, போக்குவரத்து தொழிலாளர்களுக்கான அனைத்து நிலுவைத்தொகையினையும் உடனே வழங்க வேண்டும் என அரசுக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று மதியம் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது

Leave a comment