கொள்ளை போன உலகின் மிக விலை உயர்ந்த மது பாட்டில் கண்டுபிடிப்பு

341 0

டென்மார்க் தலைநகர் நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாரில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.8 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள வோட்கா மது பாட்டிலை போலீசார் கண்டுபிடித்தனர்.

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் பிரையன் இங்க் பெர்க் என்பவருக்கு சொந்தமான மது பார் உள்ளது. இங்கு உலகிலேயே மிக விலை உயர்ந்த வோட்கா மது பாட்டிலை அவர் வைத்திருந்தார்.

அதன் மதிப்பு ரூ.8 கோடியே 50 லட்சமாகும். அந்த பாட்டில் வெள்ளை மற்றும் தங்க நிறத்தால் ஆனது. அதன் மூடியில் ரஷியாவின் இம்பீரியல் கழுகு முத்திரை உள்ளது. அதன் மீது விலை உயர்ந்த வைரம் பதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய விலை மதிப்புமிக்க ‘வோட்கா’ மது பாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டது. முகமூடி அணிந்த மர்ம மனிதன் பாரின் பூட்டை சாவி மூலம் திறந்து உள்ளே இருந்த வோட்கா பாட்டிலை திருடிச் சென்றது கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.

இங்கு ஏற்கனவே பணிபுரிந்து வேலையில் இருந்து நின்றவர்கள் மூலம் சாவியை பெற்று இருக்கலாம் என பாரின் உரிமையாளர் பிரையன் இங்க்பெர்க் தெரிவித்துள்ளார். ரஷியாவை சேர்ந்த வர்த்தகரிடம் இருந்து கடனுக்காக இதை பெற்றதாக அவர் கூறினார்.

இந்த பாட்டில் மீது இன்சூரன்ஸ் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதுகுறித்து கோபன்ஹகன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அந்நகரில் கட்டுமான பணியில் உள்ள கட்டித்திலிருந்து அந்த மது பாட்டில்  கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கொள்ளையர்கள் அந்த பாட்டிலில் உள்ள வோட்காவை குடித்து விட்டு வெறும் பாட்டிலை மட்டும் விட்டு சென்றுள்ளனர்.

Leave a comment