ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக இன்று மீண்டும் பிடியாணை

10102 0

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை உடனடியாக கைது செய்வதற்கான பிடியாணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி லங்கா ஜயரத்னவினால் இந்த பிடியாணை உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக செயற்பட்ட காலப்பகுதியில் தூதுவர் காரியாலயத்திற்காக கட்டடம் ஒன்றை கொள்வனவு செய்த தருணத்தில் அமெரிக்க டொலர் 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை முறையற்ற வகையில் கையாண்டதாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறிது காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், மருத்துவத் தேவைக்காக வௌிநாடு செல்வதற்கான அனுமதியும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்து.

8 வாரங்கள் வௌிநாடு செல்வதற்கு கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்னவினால் இவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் நிபந்தனையின் படி உரிய தினத்தில் மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகததன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 17ம் திகதி அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவருக்கு எதிராக மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a comment