ஜனாதிபதியின் செல்வாக்கை குறைப்பதற்கு சதி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல கட்சிகளும் இதில் தொடர்புபட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது என சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
நாட்டில் தூய்மையான அரசியலை ஏற்படுத்தவும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றார். கடந்த காலங்களில் பிரச்சினைகள் ஏற்படும்போது அந்த பிரச்சினையை மறைப்பதற்கே ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்ததுமுதல் அந்த நிலைமை மாறியுள்ளது. அதன் காரணமாக மக்களுக்கு ஜனாதிபதி மீதான நம்பிக்கை அதிகரித்து வருகின்றது.
அத்துடன் சிறிலங்கன் எயார் மற்றும் மிஹின் லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றிருக்கும் ஊழல் தொடர்பாகவும் விசாரணைகளை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு அமைப்பதற்கு தேவையான பரிந்துரைகளை ஜனாதிபதி மேற்கொண்டுவருகின்றார். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைகள் காரணமாக மக்கள் மத்தியில் அவருக்கு இருந்துவரும் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. அத்துடன் இந்த நடவடிக்கைகளுக்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தேர்தலுக்கு முன்னரே இந்த பிரச்சினைக்கு தீர்வு வரும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும் ஆணைக்குழுவின் அறிக்கை சற்று தாமதித்தது.
அத்துடன் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எந்த நிலையில் இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் நாட்டின் முன்னேற்றம் மற்றும் தூய்மையான அரசியலை மேற்கொள்ள ஜனாதிபதி மேற்கொண்டுவரும் நடவடிக்கை காரணமாக மக்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும்போது எங்களுடன் இணைந்துபோட்டியிட அதிகமானவர்கள் முன்வந்ததால் நாங்கள் பெரும் சிரமத்துடனே வேட்பாளர்களை தெரிவுசெய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது ஏனைய கட்சிகளின் அரசியல் செயற்பாட்டாளர்கள் அதிகமானவர்கள் எங்களுடன் இணைந்துகொள்கின்றனர்.
எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மக்களின் கட்சியாக மாறுவதுடன் சகல இன மக்களின் கட்சியாக மாறுவது நிச்சயமாகும். அத்துடன் இன,மத மற்றும் குடும்ப ஆதிக்கம் அற்ற கட்சியாக மாற்றியமைப்பதே ஜனாதிபதியின் திட்டமாகும். அதனால் ஜனாதிபதியின் இந்த வேலைத்திட்டங்களால் மக்கள் மத்தியில் நாளுக்குநாள் அவர் பிரபல்யமடைந்து வருகின்றார். இதனை தடுக்கும் நோக்கத்தில் ஜனாதிபதியின் பெயருக்கு களங்கம் ஏற்படும்வகையிலும் கட்சியின் கெளரவத்துக்கு பாதிப்பு ஏற்படும்வகையிலும் சதி நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கின்றது.
அத்துடன் சகல கட்சிகளும் கலந்துரையாடி இதனைமேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஜனாதிபதி தொடர்பில் பொய் பிரசாரங்களை பரப்புவதற்கும் சம்பளம் கொடுத்து அதிகமானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைக்கப்பெற்று வருகின்றது என்றார்.