வருடாந்த வெளிநாட்டு முதலீடு 200 – 300 கோடி அமெரிக்க டொலர்கள் எதிர்பார்ப்பு

218 0

எதிர்வரும் ஆண்டுகளில் வருடாந்தம் 200 தொடக்கம் 300 கோடிக்குமிடைப்பட்ட அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு முதலீடுகளாக எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

கடந்த வருடத்தின் இறுதிக்காலத்தில் 790 கோடி அமெரிக்க டொலர்களைத் தாண்டிய உத்தியோகபூர்வ ஒதுக்கத்தை பேண முடிந்தது. வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகையை 3.5 சதவீதத்தால் குறைக்கவும், உத்தேசிக்கப்பட்டுள்ளது.

1987ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக இந்த ஆண்டில் நடைமுறைக்கணக்குகளின் சேமிப்பு எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார்.

2018 ஆம் ஆண்டுக்கான நிதிக் கொள்கை பிரகடன வெளியிட்டு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

இலங்கை மத்திய மத்திய வங்கியின் கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நிதிக் கொள்கை பிரகடனத்தை வெளியிட்டு வைத்து தொடர்ந்து உரையாற்றுகையில் 2017 ஆம் ஆண்டு சவால்கள் நிறைந்த காலப்பகுதியாகும் சீரற்ற காலநிலையினால் விவசாயம் உட்பட பல்வேறு துறைகள் பாதகமான நிலையை எதிர்கொண்டதாகவும் கூறினார்.

நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் மூன்று பொருளாதார சட்டகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டளவில் ஆக்கபூர்வமான பணவீக்க இலக்கை கொண்ட நடைமுறையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி போட்டித்தன்மையை ஊக்குவிக்கும் வினைத்திறனான அன்னியச் செலாவணி கொள்கையும் அமுலாகிறது. ஏற்றுமதி வருமானமும் அதிகரித்திருக்கிறது. ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயம், கொழும்புத்துறைமுக நகரம் என்பனவற்றுக்கான வெளிநாட்டு முதலீடுகள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

Leave a comment