தமிழகத்தில் 4 ஆயிரம் அரசு பஸ்கள் நிறுத்தம்

3319 9

நஷ்டத்தை குறைக்க 2 மாதங்களுக்கு முன்பு 500 அரசு பஸ்கள் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் 4,000 அரசு பஸ்களின் சேவை குறைக்கப்பட்டு உள்ளது.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 23 ஆயிரத்து 400 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 2.4 கோடி பேர் பயணம் செய்து வருகிறார்கள்.

டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் வருவாயைவிட செலவு அதிகரித்தபடி உள்ளது. இதனால் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதால் போதிய நிதி ஒதுக்க முடியாத நிலையில் புதிய பஸ்கள் வாங்க முடியவில்லை.

இதற்கிடையே சென்னையில் மழையால் சேதமடைந்த சாலைகளை காரணம் காட்டி சில வழித்தடங்களில் பஸ் சேவையை நிறுத்தினர்.

இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகங்களின் வருவாயை பெருக்குவது குறித்து தமிழக அரசு உயர் அதிகாரிகள், போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

ஏற்கனவே நஷ்டத்தை குறைக்க 2 மாதங்களுக்கு முன்பு 500 அரசு பஸ்கள் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் 4,000 அரசு பஸ்களின் சேவை குறைக்கப்பட்டு உள்ளது.

சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய முக்கிய நகரங்களிலும், மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் பஸ்களின் சேவை அதிகமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், போக்குவரத்து கழகங்களில் வருவாயை அதிகரிப்பது, செலவுகளை குறைப்பது, தரமான சேவை வழங்குவது உள்பட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் பஸ்களின் இயக்கத்தை முறைப்படுத்த வேண்டும். ஒரே வழித்தடத்தில் ஒரே நேரத்தில் கூடுதல் பஸ்கள் செல்வது பற்றி ஆராய்ந்து சேவைகளை குறைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் பஸ்கள் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் முழு அளவிலான அரசு பஸ்கள் இயக்கப்படும் என்றனர்.

Leave a comment