நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம்: சகோதரருக்கு அரசு வேலை – முதலமைச்சர்

218 0

நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் அவரது சகோதரருக்கு அரசு பணி நியமன ஆணையினையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதாவின் குடும்பத்திற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும், அவருடைய குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசு பணி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 1.9.2017 அன்று அறிவித்தார்.

அதன்படி அனிதாவின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் நிதி உதவியாக 7 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று அவரது தந்தை சண்முகத்திடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

மேலும், அவரது சகோதரர் சதிஷ்குமாருக்கு சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகத்தில் (டாம்ப்கால்) இளநிலை உதவியாளராக பணியமர்த்தம் செய்து, அதற்கான பணி நியமன ஆணையினை சதிஷ்குமாரிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மோகன் பியாரே, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் உமாநாத், உடையார்பாளையம் வருவாய் கோட்ட அலுவலர் டினாகுமாரி, தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகத்தின் பொது மேலாளர் இந்துமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment