யாழில் 4 வயது பிள்ளையை கொலை செய்த பின்னர் , தாயும் தூக்கிட்டு தற்கொலை

283 0

யாழ்.அராலி பகுதியில் தாயொருவர் தனது நான்கு வயது பிள்ளையை தூக்கிட்டு கொலை செய்த பின்னர் , தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அராலி பகுதியில் நேற்று இந்த பரிதாப சம்பவம் இடம்பெற்று உள்ளது. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

அராலி பகுதியில் வசிக்கும் 26 வயதான மூன்று பிள்ளைகளின் தாயாருக்கும் அவரது கணவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் நிலவி வந்துள்ளது. அந்நிலையில் நேற்று வியாழக்கிழமை தனது பிள்ளைகளை தூக்கிட்ட பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் , கணவன் மற்றும் ஒரு பிள்ளை வீட்டில் இல்லாத வேளை தனது மூன்றாவது பிள்ளையான 4 வயது பாலகியை முதலில் தூக்கிலிட்டுள்ளார்.

அதன் பின்னர் தனது இரண்டாவது மகளான 6 வயது பாலகியை தூக்கிலிட முயன்றுள்ளார். அவ்வேளை அந்த பாலகி தாயரிடம் இருந்து தப்பி சென்று அயலவர்களிடம் நடந்த விடயங்களை கூறியுள்ளது. அயலவர்கள் விரைந்து வருவதற்கு முன்னர் தாயார் தூக்கிட்டு கொண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து விரைந்து செயற்பட்ட அயலவர்கள் தாயாரையும் 4 வயது பாலகியையும் வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தாயார் உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , நான்கு வயது பாலகிக்கு நான்கு மணித்தியாலங்களாக அதி தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் பாலகியை காப்பற்ற முடியவில்லை.

Leave a comment