கனிமொழி உட்பட 14 பேரும் விடுதலை

1849 0

மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டு வந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதி மகளான கனிமொழி உட்பட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அளித்த தீர்ப்பில் சிபிஐ மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஆ. ராசா, கனிமொழி உட்பட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளித்தார்.

குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது என்று தெரிவித்துள்ள நீதிபதி ஓ.பி. சைனீ 2ஜி வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டிருந்த 3 நிறுவனங்களையும் விடுவித்து உத்தரவுபிறப்பித்தார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா,  மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் சித்தார்த் பெஹுரா ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உட்பட 14 பேர் மீதும் ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) ஆகிய மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கில் 2011 ஏப்ரலில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில்  விதிகளை மீறி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 122 உரிமங்களை மத்திய தொலைத் தொடர்புத் துறை ஒதுக்கியதால் மத்திய அரசுக்கு ரூ.30 ,984 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கில் ரிலையன்ஸ் குழுமத்தின் (ஏடிஏஜி) தலைவர் அனில் அம்பானி அவரது மனைவி டினா அம்பானி, கார்ப்பரேட் இடைத்தரகர் நீரா ராடியா உள்பட மொத்தம் 154 சிபிஐ தரப்பு சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் வழக்கு தொடர்புடைய சுமார் 4,000 பக்கங்கள் நீதிமன்ற விசாரணையின் போது பதிவு செய்யப்பட்டன.

மேலும், சிபிஐ தொடுத்த மற்றொரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எஸ்ஸார் குழும மேம்பாட்டாளர்கள் ரவி ருய்யா, அன்ஷுமன் ருய்யா, லூப் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் கிரண் கேதான், அவரது கணவர் ஐ.பி. கேதான், எஸ்ஸார் குழும உத்திகள் திட்டமிடல் பிரிவு இயக்குநர் விகாஸ் சரஃப் ஆகியோர் மீதும் அவர்கள் சார்ந்திருந்த நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்திய மத்திய அமலாக்கத் துறை தொடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராசா, கனிமொழி, சரத்குமார், ஷாஹித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உட்பட 10 பேர் மீதும்இ ஒன்பது தனியார் நிறுவனங்கள் மீதும் 2014  ஏப்ரலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்டோரின் அனைத்துத் தரப்பு வாதங்களும் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 26ம் திகதி நிறைவடைந்தது.

இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து இன்று பரபரப்புத் தீர்ப்பை வழங்கியுள்ளார்

Leave a comment