உளவு குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜாதவை அவரது தாயாரும், மனைவியும் சந்திக்க பாகிஸ்தான் அரசு விசா அளித்துள்ளது.
பாகிஸ்தானில் இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி மரண தண்டனை விதிக்கப்பட்டவர் குல்பூஷண் ஜாதவ் (வயது 47). அவரது மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச கோர்ட்டில் இந்தியா முறையிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அவருடைய மரண தண்டனையை நிறைவேற்ற சர்வதேச கோர்ட்டு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவை இந்தியாவில் உள்ள அவரது தாயாரும், மனைவியும் சந்திக்க விரும்புகின்றனர். அவர்கள் வரும் 25-ந் தேதி ஜாதவை சந்தித்து பேச பாகிஸ்தான் அரசு அனுமதித்துள்ளது. மேலும் அவர்களுக்கு விசா வழங்க டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து ஜாதவ் தாயார் மற்றும் மனைவிக்கு பாகிஸ்தான் செல்ல நேற்று விசா வழங்கப்பட்டது. அவர்கள் வருகிற 25-ம் தேதி சிறையில் உள்ள ஜாதவை சந்திக்கவும், அவர்களுடன் இந்தியா தூதரக அதிகாரி ஒருவர் உடன் வரவும் பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது.

