புளொட்டின் முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல்!

236 0

துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட புளொட்டின் முன்னாள் உறுப்பினரை வரும் ஜனவரி 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபரை பொலிஸார் நேற்று முற்படுத்தினர். அவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் முதல் அறிக்கையை பொலிஸார் தாக்கல் செய்தனர்.

“யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள வீடொன்றில் அடாத்தாகக் குடியிருப்பவரை வெளியேற்றுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் எழுத்தாணைக் கட்டளை வழங்கியிருந்தது. அதனை நிறைவேற்ற மாவட்ட நீதிமன்றில் பதிவாளருடன் யாழ்ப்பாணம் பொலிஸார் அந்த வீட்டுக்குச் சென்றிருந்தனர்.

அந்த வீட்டிலிருந்த தளபாடங்கள் வெளியேற்றப்பட்டன. அவற்றில் அலுமாரி ஒன்றுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஏகே47 துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் கோல்ட்ஸர்கள் 2, ரவைகள் 396, கைத்துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, வோக்கிகள் 2 மற்றும் 2 வாள்கள் மீட்கப்பட்டன.

அந்த வீட்டில் அடாத்தாகக் குடியிருந்த மானிப்பாயைச் சேர்ந்த சிவகுமார் (வயது 55) என்ற நபர் கைது செய்யப்பட்டார்” என்று முதல் அறிக்கையில் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

‘நான் இருந்த வீட்டின் அலுமாரியில்தான் இந்த ஆயுதங்கள் இருந்தன. எனினும் அவை தொடர்பில் எனக்கு எதுவுமே தெரியாது’ என்று சந்தேகநபர் மன்றில் தெரிவித்தார்.

Leave a comment