உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டு எதிரணி இணைந்து போட்டியிடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவின் மகனின் திருமண நிகழ்வில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘நாங்கள் அரசியல் பேசவில்லை. தாம் மற்றொரு திருமணத்தில் பங்கேற்க வேண்டியிருப்பதாக மைத்திரிபால சிறிசேன என்னிடம் கூறினார். நானும் கூட இன்னொரு திருமணத் தில் பங்கேற்க வேண்டியிருப்பதாகக் கூறினேன்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, பொதுமக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கூட்டு எதிரணி தனித்துப் போட்டியிடும் முடிவு இறுதியானது என்றும், வேட்புமனுக்களை இறுதி செய்வதில் தாம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.