மீனவர்கள் உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

5591 0

மீனவர்களின் உயிரிழப்புக்கு தமிழக ஆட்சியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்கள் அனைவரும் பத்திரமாக கரை திரும்ப வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் வேண்டிக் கொண்டிருந்த நிலையில், நீரோடியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 13 மீனவர்களின் உடல்கள் கடலில் மிதப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அனைவரும் கதறிய நிலையில், அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காததன் மூலம் இந்த மீனவர்களை தமிழக அரசு கொலை செய்திருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்த மீனவர்கள், காணாமல் போனவர்களை தேடி 100 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் சென்ற போது, மீனவர்கள் உடல்கள் மிதப்பதை கண்டு பிடித்துள்ளனர். அவர்களின் உடல்களுக்கு அருகில் மிதந்த செல்பேசிகள், அடையாள அட்டைகள் ஆகியவற்றின் மூலம் அவர்களின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை கடந்த மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் ஒக்கி புயல் சூறையாடிய நிலையில், அதற்கு முன்னதாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை என்றும், அவர்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசும், மத்திய அரசும் மேற்கொள்ள வேண்டும் என்றும் மீனவ சொந்தங்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற நானும் இதுதொடர்பாக கோரிக்கை விடுத்ததுடன், குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால், அரசுகள் அதை ஏற்கவில்லை.

அப்போதே மீனவர்களை தேடும் பணியை கடலோரக் காவல்படையும், கடற்படையும் முறையாக மேற்கொண்டிருந்தால் கானாமல் போன மீனவர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.ஆனால், ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் 100 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் தான் தங்கி மீன் பிடிப்பர் என்ற அடிப்படையை உணராமல் 30 முதல் 60 கடல் மைல் பகுதியில் மட்டுமே தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

அதனால் தான் புயலில் சிக்கி நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்க முடியவில்லை. 100 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டிருந்தால் இப்போது உயிரிழந்ததாக கூறப்படும் 13 மீனவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் அதை செய்ய அரசு தவறிவிட்டது. அந்த வகையில் 13 மீனவர்களின் உயிரிழப்புக்கு தமிழக ஆட்சியாளர்களே பொறுப்பேற்க வேண்டும்.

இப்போது கூட உயிரிழந்த மீனவர்களின் உடல்கள் மிதப்பதை மீனவர்கள் தான் தேடிக் கண்டுபிடித்து இருக்கிறார்களே தவிர மீட்புக் குழுக்கள் செய்யவில்லை. மீனவர்களின் உடல்கள் மீட்க முடியாத அளவுக்கு சிதைந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில் அவற்றை மீட்டு முறைப்படி இறுதிச்சடங்குகளை நடத்த அரசு உதவ வேண்டும்.

இவர்கள் தவிர இன்னும் சுமார் 600 மீனவர்கள் என்ன ஆனார்கள்? என்பது தெரியவில்லை. அவர்களைக் கண்டுபிடிக்கவும் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

காணாமல் போன மீனவர்களை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 7ஆம் தேதி தொடர்வண்டி மறியல் போராட்டமும், கடந்த 3 நாட்களாக சாலை மறியல் போராட்டமும் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வளவுக்குப் பிறகு கடலில் மீனவர்களின் படகுகளையோ, உடல்களையோ காணவில்லை என்ற பதில் தான் கடலோரக் காவல்படையிடமிருந்து கிடைக்கிறது. அதேநேரத்தில் மீனவர்கள் தங்களின் படகுகளில் சென்று மீனவர்களின் உடல்களை கண்டுபிடித்துள்ளனர்.

இதிலிருந்தே அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளின் தன்மையை அறிய முடியும். இது காணாமல் போன மீனவர்களை மீட்பது குறித்த அச்சத்தை அதிகரிக்கிறது. எப்பாடு பட்டாவது நமது மீனவர்கள் மீட்கப்பட வேண்டும்.

எனவே, நவீன கப்பல்கள் மற்றும் உலங்கு ஊர்திகளை பயன்படுத்தி 100 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் மீனவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட வேண்டும். அரசின் அலட்சியத்தால் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a comment