மண்சரிவு அபாயம் : 400க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்.!

579 0

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் வெலிமடை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட ஒஹிய, உடவேரிய, லைபோன் ஆகிய தோட்டங்களில் இருந்த தொழிலாளர்கள் குடும்பங்களை தங்களின் குடியிருப்புக்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அண்மையில் பெய்த கடும் மழையை அடுத்து, ஏற்பட்ட அபாயம் காரணமாக ஒஹிய, உடவேரிய, லைபோன் தோட்டங்களின் 120 குடும்பங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.இவர்கள் தற்காலிகமாக தங்குவதற்காக உடவேரிய தோட்டத்தில் கைவிடப்பட்ட தேயிலை தொழிற்சாலையொன்றில் தங்க வைக்கப்பட்ட போதிலும், அங்கு எவ்வித வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.இவர்கள் கடந்த ஒரு வார காலமாக குறித்த தேயிலைத் தொழிற்சாலையில் தங்கியுள்ளனர். மேலும் சிலர் பாடசாலையிலும் தோட்ட ஊழியர் வீட்டிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தேயிலைத் தொழிற்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள போதிலும் தொழிற்சாலைக்குள்ளேயே கூடாரங்களை அமைத்து எவ்வித அடிப்படை வசதியுமற்ற நிலையில் வாழ வேண்டிய இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

எனவே இப்பகுதியை சேர்ந்த அரசியல் தலைமைகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து எங்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்பதோடு, அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment