அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தியது

485 0

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்று  மதியம் மன்னார் தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் இணைச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில், சட்டத்தரணி நடராஜா காண்டிபன், மன்னார் மாவட்டத்தில் அதிகாரம் அழிக்கப்பட்ட முகவர் அந்தோனி சகாயம் ஆகியோர் இன்று  மதியம் 12.5 மணியளவில் மன்னார் தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச சபை,  மாந்தை மேற்கு பிரதேச சபை,மடு பிரதேச சபை ஆகிய 5 உள்ளூராட்சி  மன்றங்களில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்பணம் செலுத்திய நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் இணைச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்,

“சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்த கூட்டு அணி சார்பாக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.மன்னார் மாவட்டத்தில் ஒரு நகர சபை மற்றும் 4 பிரதேச சபை உள்ளடங்களாக ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்ல வடக்கு – கிழக்கில் உள்ள தமிழர் தாயகத்தில் உள்ள 8 மாவட்டங்களிலும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சைக்கிள்  சின்னத்தில் போட்டியிடவுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளோம்.” என தெரிவித்தார்.

Leave a comment