ஜெருசலேம் விவகாரம்: டிரம்ப் அறிவிப்புக்கு குவியும் எதிர்ப்புகள் – வெடித்தது போராட்டம்

754 0

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை அடுத்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.

கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம் மதத்தினருக்கு புனித நகராக இருக்கும் ஜெருசலேம் தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.

டிரம்ப்பின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமல்லாது பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், துருக்கி போன்ற ஐரோப்பிய நாடுகளும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. ஒட்டுமொத்த அமைதியை குலைக்கும் அறிவிப்பு இது என பல்வேறு நாட்டு தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

ஜெருசலேம் நகர்

இந்நிலையில், டிரம்ப் தனது முடிவை அறிவித்த சில மணி நேரங்களிலேயே பாலஸ்தீனின் பெத்தலகேம் நகரில் (இயேசு பிறந்ததாக கூறப்படும் இடம்) உள்ள பழமையான தேவாலையத்தில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்தின் விளக்கை அணைத்து அங்குள்ள கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனது முடிவை அறிவிக்கும் டிரம்ப்

டிரம்ப் புகைப்படத்தை எரித்த அவர்கள், ‘ஜெருசலேம் பாலஸ்தீனத்தின் இதயம்’ என்று கோஷங்களை எழுப்பினர். இதேபோல, பாலஸ்தீன தலைவர் யாசிர் அராபாத் அடக்க தலமான ரமல்லா நகரில் திரண்ட பாலஸ்தீனியர்கள் டிரம்ப்புக்கு எதிராக ஆவேச குரல்களை எழுப்பினர்.

காஸா, மேற்கு கரை பகுதிகள் மட்டுமல்லாது லெபனான், ஜோர்டான் ஆகிய நாடுகளில் அகதிகள் முகாமில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நாளை அவசரமாக கூட உள்ளது.

Leave a comment