எமது சிங்களத் தலைவர்களை விட பிரபாகரனே சிறந்த தலைவர்!!- ஞானசார தேரர்

399 0

சிங்களத் தலைவர்களை விடவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்;

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தாலும், இலங்கை இராணுவத்தில் இருந்தாலும், சிங்களவராக இருந்தாலும், தமிழ், முஸ்லிமாக இருந்தாலும் மக்களே என்பதை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோம்.விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்தாலும் போராட்ட நோக்கம் சிறந்ததாக இருக்கலாம்.

எமது சிங்களத் தலைவர்களை விடவும் விடுதலைப் புலிகளின் தலைவர் சிறந்த தலைவர். அவருக்கு நேர்மை இருந்தது. அந்த நோக்கத்திற்கு உண்மைத்தன்மை இருந்தது என புகழாரம் சூட்டியுள்ளார்.எனினும் விடுதலைப் புலிகளின் தலைவர் தெரிவுசெய்த வழிதான் பிழை. ஆயுதத்தை கையில் ஏந்தியது தவறு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.வடக்கில் இருப்பவர்கள் இந்தியாவின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லர். விடுதலைப் புலிகளின் போராட்டமும், ஜே.வி.பி போன்ற போராட்டத்தை ஒத்ததாகும்.

இந்த உள்ளகப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களும் எமது மக்களாகும். எனினும் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதாக தெற்கு மக்களுக்கு கூறிவிட்டு வடக்கில் வேறு ஒன்றை செய்வதை ஏற்கமுடியாது.இதனூடாக இனங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்படுகிறது. சாதாரண மக்கள் இதனை செய்யமாட்டார்கள். இதனைத் தூண்டி ஏற்பாடு செய்கிறவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment